மார்த்தாண்டம், மார். 10 –
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் சுகின்ராஜ் (27). இவர் வீட்டு செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகிறார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வைத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி செல்லப்பாணிகளுக்கு சிகை அலங்காரம் செய்யும் இந்திய அளவிலான போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்களும் கலந்துள்ளனர். இதில் ஒருவராக குமரி மாவட்டத்தை சார்ந்த சுகின் ராஜ் -ம் பங்கேற்றுள்ளார்.
இரண்டு மணி நேரத்தில் செல்லப்பிராணிகளுக்கு சிகை அலங்காரம் செய்து நடுவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதன் முதலாக பங்கேற்ற போட்டியிலேயே முதல் பரிசை வென்றுள்ளார் சுகின்ராஜ்.
இது குறித்து சுகின்ராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், :- இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆனால் தான் முதன்முதலாக பங்கேற்ற போட்டியில் முதல் பரிசை வென்றதில் பெருமிதம் அடைவதாகவும், அடுத்த கட்டமாக உலகளாவிய போட்டியில் பங்கேற்று அதிலும் முதல் பரிசை வெல்வதாகவும் கூறினார்.
இப்படி ஒரு போட்டியிருப்பது அதிகமான மக்களுக்கு தெரியாது. செல்லப்பிராணிகளிடமிருந்து கடி வாங்குவது, செல்லப் பிராணிகளுக்கு காயம் அடையாமல் அலங்காரம் செய்வது போன்ற சவால் நிறைந்த தொழிலாக இருந்தாலும் இந்த தொழில் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் உலகளாவிய போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வென்று இந்தியாவுக்கு வெற்றியை தேடி தருவதோடு, தற்போது நடந்த இந்திய அளவிலான போட்டியில் பரிசு வென்றதில் பெருமிதம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.



