விளாத்திகுளம், ஆகஸ்ட் 15 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில் 17-ம் ஆண்டு ஆடி மாத கொடை விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அக்னி சட்டி ஊர்வலம், சாமிஅழைப்பு, பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி செல்லியம்மனுக்கு இளநீர், பால், தயிர், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரியை சுற்றி அம்மன் பாடல்களை பாடி கும்மி அடித்த பின், மூலவர் செல்லியம்மன் உள்ளிட்ட வளர்க்கப்பட்ட முளைப்பாரியை சுமந்தவாறு சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஆற்றுப்பாலத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



