மயிலாடுதுறை, ஆகஸ்ட் 28 –
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் பூசை மடத்தில் சொக்கநாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சொக்கநாதன் விநாயகருக்கு பாவனாபிஷேகம் செய்து வைத்து சோடச உபசாரங்களை செய்தார்.
பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை தயார் செய்து பக்தர்கள், பாடசாலை மாணவர்கள் இவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஞானப்பிரகாச விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. 3000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியமான பஞ்சவாத்தியம் இசைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



