நாகர்கோவில், ஜூன் 23 –
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்களும் இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நான்காம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. நான்காம் கட்ட புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்புகளாகக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வகை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் எமிஸ் லாகின் வழியாக அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும். கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ நிராகரிக்கவோ திருத்தங்கள் செய்யவோ அரசு உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வு குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. சீராய்வு குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.