ராமநாதபுரம், ஜுன் 28 –
ராமநாதபுரத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரில் மாபெரும் பேரணி நடத்தி தர்ணா போராட்டம் செய்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடமை பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திட கோரியும் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் ஜூலை 1-ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரில் பேரணி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1500 பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி டி ப்ளாக் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக நடைபெற்ற கண்டன தர்ணா போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் பழனிகுமார் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் மாவட்ட செயலாளர் ஜெகநாத பூபதி நில அளவைத்துறை மாவட்ட செயலாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு மாநில செயலாளர் காசிநாதன் துரை, கிராம நிர்வாக அலுவலர்கள், சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.



