நாகர்கோவில் பிப் 25
விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்ய அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதன்படி மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு பதிவு வாரம் (24-ஆம் தேதி திங்கட் கிழமை முதல் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை வரை) அமல்படுத்தியுள்ளது. நாள்தோறும் வேலைசெய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின்போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது.
சிறப்பு முகாம்:
இத்திட்டத்தில், 18 முதல் 65 வயதுக் குட்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் எண், செல் போன் எண், வாரிசுதாரரின் (நாமினி) விவரங்கள். திட்டத்தின் கட்டண விவரம், ரூ.320-க்கு ரூ.5 லட்சம். ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மாவட்டம் முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் 24-ஆம் (திங்கட்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடத்தப்பட்ட உள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை தபால் அலுவலகம் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்களையும் அணுகலாம் அல்லது 04652-230493 என்ற எண்ணில் கன்னியாகுமரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.