திண்டுக்கல், செப். 18 –
தென்னிந்திய அளவிலான ரோல் போட்டிகள் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 31 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்கு மேற்பட்டோர், 14 வயதுக்கு மேற்பட்டோர், 9 வயதுக்கு மேற்பட்டோர், 9 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளிலும் பெண்கள் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது.
இந்த 4 பிரிவுகளிலும் விளையாடிய ஆண்கள் அணி 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகளுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவர் மாஸ்டர் எம். பிரேம்நாத், ரோல்பால் பயிற்சியாளர்கள் கலையரசன், சக்திவேல், தங்கலெட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



