தருமபுரி, மே 27 –
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொ. துரிஞ்சிப்பட்டியில் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களை பரிசோதித்து அதன் தரம் குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.
மேலும் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைப கருவிகளை ஆய்வு மேற்கொண்டார். அரிசி உள்ளிட்ட அதியவாசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டுமென்று விற்பனையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஆசாத், உதவி திட்ட அலுவலர் அருண்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, உமா, ரங்கநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.



