இராமேஸ்வரம், நவ. 10 –
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா சிவ சேதுராம முருகவேல் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் 42 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சமுத்திர வேல்முருகன் கோயில் அமைக்கப்பட்டு அதன் குட முழுக்கு விழா கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமத் சிவகர தேசிக சுவாமிகள் அவர்களின் பன்னிரு திருமுறைகள் அருளுரையும் பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பாக பவளக்கொடி கும்மி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, இன்று காலையில் மூன்றாம் கால பூஜை நிறைவடைந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் குடத்தை எடுத்து சென்று ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன், கால பைரவர், வாராஹி அம்மன், 18 சித்தர்களுக்கு சன்னதி விமானங்கள் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராமேஸ்வரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் அரண்மனை நாகநாத சேதுபதி, நகர்மன்ற தலைவர் நாசர் கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



