பரமக்குடி, ஜூன் 26 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் பணி மாறுதலில் பாரபட்சம் இல்லாமல் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்குப் பணி மாறுதல் வழங்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் மூன்றாண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் 772 பேருக்கு மாவட்ட காவல்துறையின் மூலம் பொதுப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. காவலர்கள் தங்களின் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் கல்விக்காக விரும்பி கேட்ட காவல் நிலையங்களில் பணி மாறுதல் செய்யப்படாமலும் சில உட்கோட்டங்களில் உள்ள காவலர்களுக்கு கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல காவலர்கள் வெளியில் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் உள்ளனர். 31- 3-2025 வரை மூன்று ஆண்டுகள் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு வேற காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் 31-3-25 க்கு பின்னால் மூன்று ஆண்டுகள் முடிந்தும் பொது பணி மாறுதல் செய்யாமல் இன்று வரை அதே காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு பணிக்காலமாக உள்ளது. ஆகையால், 31-3-25 பின்பு மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்குப் பொதுப்பணி மாறுதல் அளிக்க வேண்டும். இந்த மாதத்தில் மாறுதல் அளிக்கப்பட்டால் மட்டுமே தனது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே காவலரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் சில காவல் நிலையங்களில் அயல் பணியாக சில காவலர்கள் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் மதுவிலக்குப் பிரிவில் பணி மாறுதல் ஆணை வழங்கப்படாமல் உள்ளது. ஆகையால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில், சார்பு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.