தஞ்சாவூர், ஜூன் 21 –
தஞ்சாவூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்குப் பிறகு கணவனிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழியனுப்பி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மன நலம் பாதிக்கப்பட்ட 30 வயதான ஒரு பெண் குழந்தையுடன் மீட்கப்பட்டார். அவரை தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர மற்றும் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த பெண் கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தப் பெண்ணுக்கு மாவட்ட மனநல மருத்துவர் சித்ராதேவி பரிந்துரையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்த அந்தப் பெண் நாளடைவில் குணமடைந்து வந்த நிலையில் தனது கணவன் மற்றும் ஊர் பெயரை மருத்துவர்களிடம் இந்தியில் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பேசத் தெரிந்த ஒருவர் மூலம் அந்த பெண்ணிடம் பேசி தகவல்களை செட் இந்தியா நிர்வாகிகள் சேகரித்தனர்.
அதன் பேரில் அந்த பெண் பீஹார் மாநிலம் நவடா மாவட்டம் கொண்டாப்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் பெயர் முன்னி தேவி என்றும் கணவர் பெயர் பிரகாஷ் என்பதும் தெரிய வந்தது. குழந்தை பெயர் சுகானா என்பதும் தெரிய வந்தது. பிரகாஷ் அங்குள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து பீகார் மாநில போலீஸ் மூலம் முன்னி தேவியின் கணவரைக் கண்டறிந்து அவர் கூறுவது உண்மைதானா என வீடியோ கால் மூலம் பிரகாஷிடம் பேசினர். அப்போது அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், முன்னி தேவி மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதற்கு மருந்து சாப்பிட்டு வந்த முன்னி தேவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அவர் மாத்திரைகள் சாப்பிடாமல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் தனது மனைவி தஞ்சாவூரில் இருப்பதை அறிந்த பிரகாஷ் சந்தோஷத்துடன் உறவினர்களுடன் தஞ்சாவூருக்கு வந்தார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் முன்னி தேவி பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது செட் இந்தியா நிர்வாக இயக்குனர் பாத்திமா ராஜ், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர மற்றும் சிகிச்சை மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிசாந்தி 181 ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முன்னி தேவிக்கு தொடர் சிகிச்சை, மருந்துகள், ஆடைகள், இனிப்புகள் வழங்கி மாவட்ட கலெக்டர் வழியனுப்பி வைத்தார். தனது மனைவி மற்றும் குழந்தையை 8 மாதங்களுக்குப் பிறகு பார்த்ததும் பிரகாஷ் நெகிழ்ச்சியுட ன் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது குழந்தையையும் மனைவியையும் மகிழ்ச்சி பொங்க அழைத்துக்கொண்டு சென்றார். அவருடன் செட் இந்தியா தன்னார்வலர்கள் சென்னை வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.



