மதுரை, ஆகஸ்ட் 22 –
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமண நாளை முன்னிட்டு அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
இல்லம் தோறும் எடப்பாடியார் என்கிற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.
மேலும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று மக்களை எழுச்சி பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த எழுச்சி பயணத்தில் திமுக செய்த வஞ்சகத்தையும், அதிமுக செய்த சாதனைகளை எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார் என்று கூறினார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக உடனிருந்தனர்.



