மதுரை, ஆகஸ்ட் 14 –
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு -தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை எனும் தலைப்பில் மாவட்ட அளவிலான தமிழக அரசு விழா, மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் பி. பொன் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் கலந்து கொண்டு சமூக நீதியும் பொருளாதர முன்னேற்றமும் எனும் தலைப்பில் அரிய கருத்துகளை விதைத்ததோடு அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை அடைந்திட வேண்டும் என்ற நோக்குடனே தமிழக அரசின் திட்டங்கள் தொலைநோக்கு சொற்பொழிவு ஆற்றினார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ் காட்சி அரங்கத்தை பார்வையிட்டு கீழடி, இரும்பின் தொன்மை மற்றும் கல்வித்திட்டம் & மாபெரும் தமிழ்க் கனவு 2025 ஆகிய நிகழ்வின் பதிவுகளை காணொளி காட்சி மூலம் கண்டு உணர்ந்தனர். மேலும் தமிழ் பெருமிதம் எனும் நூல் கருத்தை மேடையில் பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி ஆகிய விருதுகளும் சிறப்பு விருந்தினரின் சிறப்புரையிலிருந்து தமிழ் உணர்வு சார்ந்த வினாக்களை எழுப்பிய சிறந்த 10 மாணவ, மாணவியர்களுக்கு கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி எனும் விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் முனைவர் அ. ராமசுப்பையா, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வானதி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம், அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ராமமூர்த்தி மற்றும் தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலகள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.


