மதுரை, ஆகஸ்ட் 16 –
மதுரை பெருங்குடி பகுதியில் புதிதாக 13.50 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: 2024 தேர்தலில் குளறுபடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “2024 தேர்தலில் வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக கடந்த வியாழன் அன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு மத்திய தொகுதியில் நடைபெற்றதை நிரூபித்துள்ளார். பெங்களூரில் ஒரு லட்சம் கள்ள ஓட்டு போட்டு 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போல் 48 தொகுதிகளிலும் நடைபெற்றுள்ளதால் இந்த அரசு பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.
பாராளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள் வாய்ப்பு கேட்டு அனுமதிக்கவில்லை. இதுகுறித்து 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்வதற்காக சென்ற போது இதைப்பற்றி சந்திக்க ஞானேஸ்வர் சிங் விரும்பவில்லை. ஞானேஸ்வர் சிங் மற்றும் ராஜீவ் குமார் பாஜக-வின் ஏஜெண்டுகளாக செயல்படுவதால் தேர்தல் ஆணையம் தன்னுடைய நிலையை இழந்து பாஜக-வின் துணை அமைப்பாக செயல்படுகிறது. இதனால் மற்ற கட்சிகளுக்கு வாக்கு இல்லாமல் போகிறது. இதனுடைய விளைவாக பாஜகவினருக்கு மட்டுமான ஜனநாயகமாக மாறுகிறது. ஆர்.எஸ்.எஸ் துணையுடன் நடைபெறுகிறது.
இதை எதிர்த்து ராகுல் காந்தி 17-ம் தேதி பீகார் மாநிலத்தில் யாத்திரையை தொடங்குகிறார். வாக்காளர் உரிமை யாத்திரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. 12 சதவீத இந்தியா கூட்டணி வாக்காளர்களை டெலிட் செய்து விட்டு பீகாரில் தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதமானது. அனைத்து மாநிலத்திற்கும் இது ஆபத்தாக முடியும். இது போன்ற அறிவியல் தனமான ஃபிராடுத்தனங்களை பாஜக அரங்கேற்றுகிறது. இதில்
பாஜகவினர் எதுவும் செய்யவில்லை. ஆட்டோ பைலட் போல தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது” என்றார்.
அதன் பின்னர் ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு “விஜய்க்கு நன்றி. ஜனநாயகத்திற்காக போராடுகின்ற ராகுல் காந்திக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நன்றி”. தமிழகத்தில் புதிதாக 6 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்தது ஊழல் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு “நைனார் நாகேந்திரனுக்கு இதில் என்ன செய்கிறார்கள் என பாதி தெரியாது. ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் தேர்தல் ஆணையம் தான் செய்யப்படுகிறது. பாஜக தலைமைக்கு சப்பை கட்டுவதாக நினைத்துக் கொண்டு தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கிறார்கள். இது மிக ஆபத்தாக இருக்கப் போகிறது. அது தெரியாமல் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் கருத்து சொல்லி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது”.
ஆளுநரின் தேனீர் விருந்து புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்களைப் பொறுத்த அளவில் ஆளுநர் ரவி தமிழகத்திற்கு எதிரான முடிவை எடுப்பதால் அவருடைய சம்பிரதாயத தேநீர் விருந்தை புறக்கணித்து உள்ளோம்”. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய் மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு “இது அவரின் கட்சி மாநாடு. பாஜக நடத்தினாலும் சரி. எந்த கட்சி நடத்தினாலும் சரி. அவர்களின் கட்சிக்காக நடத்துவது அவர்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் நாங்கள் இந்தியாவின் 12 சதவீத வாக்காளர்களை இல்லாமல் செய்து விட்டதற்காக நடக்கும் சண்டை மிகப்பெரிய சண்டையாக உள்ளது. மேலும் அவர்களின் வாக்காளர்களுக்கு இரண்டு மூன்று வாக்காக அளித்துள்ளதால் கிட்டத்தட்ட 25 சதவீத வாக்குகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் சூழல் இந்தியா கூட்டணிக்கு வந்துள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் பெரிய சண்டை நடைபெறுவதால் எங்கள் கவனம் அதில் உள்ளது”.
தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணியா என்ற கேள்விக்கு “அது உங்களின் தகவலாகவே இருக்கட்டும்”. விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு “இது வருத்தத்திற்குரிய விஷயம். இது குறித்து நிதி அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். விரிவாக்க பணிக்காக தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்டவை நிறைவேற்றப்படுத்துவதற்கு கேட்டிருக்கிறோம் முதல்வரிடம் பேசி முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.



