திருப்பரங்குன்றம், ஜூன் 9 –
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை அணி சார்பில் உசிலம்பட்டியைச் சேர்ந்த சீதா என்ற பெண் வேட்பாளரும் மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும் திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனைப் போட்டியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் விதிமுறைகளை மீறி செல்வப் பெருந்தகை அணி வேட்பாளர் சீதா போட்டியிடுவது என உறுதி செய்யப்பட்டு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக வித்யாபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட வித்யாபதி முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகியும் நெல்லை நகர் மன்றத் தலைவருமான ப.ராமசாமி மகள் வழிப் பேரன் ஆவார். மேலும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.