குளச்சல், மார்ச் 23 –
தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தை சேர்ந்தவர் அனீஸ் (29). இவரது மனைவி அர்ச்சனா (26). இன்று இவர்கள் பைக்கில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தனர். அர்ச்சனா பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தார். இருவரும் பைக்கில் மீண்டும் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர். மண்டைக்காடு நடுவூர் கரை சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் நிறுத்தி இருந்த பைக்கை திடீரென இயக்கினார்.
அந்த பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நீளமான மூங்கில் கழையை தோளில் வைத்திருந்தார். அப்போது அனீஸ் ஓட்டிய பைக் எதிர்பாராத விதமாக மூங்கில் கழை வைத்திருந்த பைக்கின் பின்னால் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த அர்ச்சனா மீது மூங்கில் கழை பட்டது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து அர்ச்சனா படுகாயம் அடைந்தார்.
உடனடியாக மூங்கில் வைத்திருந்த பைக்கில் வந்தவர்கள் அவர்களை மீட்டு குளச்சல் தனியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


