தூத்துக்குடி, பிப். 9 –
பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வசுவப்பனேரி, மீரான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை.
குறிப்பாக, வல்லகுளம், அரசர்குளம், பெருமாள் குளம், மீரான்குளம், புதுக்குளம், வெட்டிகுளம், தேர்க்கன்குளம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. குளங்களில் தண்ணீர் இல்லாததால், வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் வேளாண் பயிர்கள் அனைத்தும் தற்போது வாடிய நிலையில் உள்ளன.
நிலைமை இதேபோல் நீடித்தால், பயிர்கள் முற்றிலும் அழிந்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்படும். ஆகையால் வேளாண் பயிர்களைக் காப்பாற்ற, மணிமுத்தாறு அணை 3-ஆவது கால்வாய் வழியாக உடனடியாகத் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



