கிருஷ்ணகிரி, ஜூன் 25 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 358 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும் தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.