நாகர்கோவில், ஜூன் 26 –
பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்தத் தேர்வின் மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்தபடி பல மாணவ, மாணவியர் மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர்.
அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவ மாணவியரின் மதிப்பெண் பட்டியல்கள் 23ம் தேதி பிற்பகலில் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவ மாணவியரின் விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவ, மாணவியர் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு எழுதியோர்க்காண அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறு கூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டதில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டு மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.