நாகர்கோவில், செப்டம்பர் 27 –
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அக்டோபர் 6ம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
காலாண்டு தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு 2ம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலாண்டு விடுமுறை காலங்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விபரங்களை எமிஸ் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்து மாவட்டத்தில் மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை பள்ளி கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


