கிருஷ்ணகிரி, அக். 04-
தற்போது பண்டிகை காலம் தொடங்கவுள்ளதால் தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப் பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் மற்றும்
பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இதனை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் உணவு தர கட்டுப்பாட்டு சான்றிதழ், பதிவு எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழிலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர் கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம், பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் அதற்கான பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும்.
நிரந்தர இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் சுகாதார குறியீடு பெற வேண்டும். பொது மக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் Unavu-pukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும், கூகுள் பிளேஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் TN food safety consumer App நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என அனைத்து உணவு பொருள் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



