நாகர்கோவில், பிப். 20 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தற்போதைய எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜெகநாதன், முன்னாள் ஐ.டி.விங் மாவட்ட நிர்வாகி சுபாஷ் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கொடுக்கும் குடைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமித்ஷா ஆகியோர் அதிதீவிரம் காட்டி வருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியை வலுப்பெற வைத்ததில் முக்கிய பங்காற்றியது பாஜக என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில்,தற்போதே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வருகை அதிகரிக்க தொடங்கிவிட்டது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., தேர்தலில் தங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் பொறுப்பாளர்களையும் பா.ஜ., தலைமை அறிவித்துள்ளது.
பா.ஜ.,புது வியூகம்..!
பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது.கடந்த 20 ஆண்டு வரலாற்றில் எப்போதுமே பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூத்த நிர்வாகிகளாகவே இருந்து வருகின்றனர். ஆனால் இம்முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகளவில் வழங்க வேண்டும் என்ற முடிவினை பா.ஜ., தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முடிவுடன் வேட்பாளர் தேர்வினை தொடங்கியுள்ளதாம் பா.ஜ.க.
கட்சி மீது விஷ்வாசம் இருக்க வேண்டும்.பாரம்பரிய பா.ஜ., குடும்பமாக இருக்க வேண்டும்.கட்சிக்காக ஏதாவது ஒரு வகையில் தியாகம் செய்திருக்க வேண்டும்.குறிப்பாக சுய விளம்பரங்களை மட்டும் முன்னெடுத்து செல்பவர்களாக இருக்க கூடாது என பல்வேறு தீர்க்கமான முடிவுகளை தேசிய தலைமை மாநில தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே பா.ஜ.க வெற்றி பெற்றது.இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,ஏற்கனவே தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் எம்.ஆர்.காந்தி மற்றும் மாநில செயலாளர் மீனாதேவ் என மூன்று தலைகள் வேட்பாளர் பட்டியலில் இருந்து வரும் நிலையில், இம்முறை நாகர்கோவில் தொகுதியில் இளைஞர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜெகநாதன் , முன்னாள் ஐ.டி.விங் மாவட்ட நிர்வாகி எஸ்.சுபாஷ் ஆகியோர் பெயர்கள் இளைஞர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருமே பாரம்பரிய பா.ஜ.,குடும்பத்தை சேர்ந்தவர்கள்.வக்கீல் ஜெகநாதன் சிறந்த பேச்சாளர், மாவட்ட பொதுச்செயலாளர் ,மத்திய அரசு வழக்கறிஞர் , சட்டமன்றத் தொகுதி அளவில் பூத் கமிட்டி பொறுப்பாளர் ஆகிய பதவிகள் வகித்தவர்.கடந்த ஓராண்டுக்கு முன்பு நாகர்கோவில் பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட திரண்டபோது கையில் கம்புடன் காங்கிரஸ் கட்சியினரை ஆக்ரோஷமாக விரட்டியடித்ததில் வக்கீல் ஜெகநாதன் அரும்பாடுபட்டார்.
இச்சம்பவம் டெல்லி தலைமைக்கு அன்றே நேரடியாக சென்றது. அதன் அடிப்படையில் வக்கீல் ஜெகநாதனை களம் இறக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .
அந்த வரிசையில் அடுத்தபடியாக தென்தாமரைக்குளம் பேரூராட்சி கவுன்சிலரும், முன்னாள் ஐ.டி.விங் நிர்வாகியுமான சி.எஸ்.சுபாஷ் ,திமுக குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் ஜெயிலில் இருந்தார் .
சமூக வலைதளங்களில் திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை துணிச்சலுடன் பதிவு செய்பவர்.கட்சிக்காக 13 நாட்கள் ஜெயிலில் இருந்தவர் என்ற அடிப்படையில் இவர் பெயரும் டெல்லி தலைமையின் மூளைக்குள் உள்ளதாம்.
தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் நம்பிக்கை பெற்ற இவருக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் பக்கபலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்து,வேட்பாளராக களம் இறக்கலாம் என்ற முடிவுடன் தலைமை இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது போல் மாய பிம்பத்தை ஏற்படுத்தி இந்த தேர்தலில் எப்படியாவது சீட்டு வாங்கிவிடலாம் என கங்கணம் கட்டி சுற்றி வலம் வரும் தொண்டர்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்குமா? இல்லை உண்மையாக பாஜகவுக்காக இறுதி மூச்சு வரை உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் பாஜாகவினர் .



