நாகர்கோவில், ஜூன் 15 –
குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை நாய்கள் துரத்துவதால் நிலைதடுமாறி விழுந்து காயமடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இந்நடவடிக்கை போதிய பலனைத் தரவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவரை திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது. வலியால் அவர் அலறித் துடித்தார். அவரது கூச்சலைக் கேட்டு சுற்றியிருந்த பொதுமக்களும், சக ஊழியர்களும் ஓடிவந்து நாயை விரட்டினர். இதனால் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.
இதைத் தொடர்ந்து காயமடைந்த அந்தத் ஊழியரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலகத்திற்குள் ஊழியரை நாய் கடித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நாய்களை வலைவீசிப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



