நாகர்கோவில், ஜன. 20 –
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 31.12.2024 அன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், விழா சிறப்பு மலரை வெளியிட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்ந்து தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். அந்த அறிவிப்பின் படி வரும் 23 வெள்ளி மற்றும் 24 சனி ஆகிய தினங்களில் நாகர்கோவில், பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த திருக்குறள் மாநாட்டில் தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1500 பேர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன. இம்மாநாட்டில் திருக்குறள் சார்ந்த விவாத மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருக்குறள் மாணவர் மாநாட்டினை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், தலைமையேற்று நடத்துகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றுகிறார். மேலும் குமரி மாவட்ட எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த தகவலை விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.



