தஞ்சாவூர், செப்டம்பர் 19 –
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெடி பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு கடைகளிலிருந்து மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் உரிமம் பெற்ற வளாகங்களில் தீயணைப்பான்கள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் ஆகியவற்றை பயன்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். வெடி பொருள்களின் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்க ப்பட வேண்டும். பட்டாசுகள் சேமிப்பு வளாகத்திற்கும், பட்டாசுகள் விற்பனை செய்யும் வளாகத்திற்கு ம் இடையே வெடிபொருள் விதிகள் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 15 மீட்டர் குறைந்தபட்ச பாதுகாப்பு தூரம் பராமரிக்கப்பட வேண்டும்.
பட்டாசு கடைக்கு அருகில் தற்காலிக கொட்டகைகள், விரிவாக்கப்பட்ட கொட்டகைகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. கடை வளாகத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க உரிமம் இடத்திற்கு வெளியே புகை பிடிக்கக் கூடாது மற்றும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். எந்தவொரு அவசர நிலையை சந்திக்க ஈரமான சாக்கு பைகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை வளாகத்தில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு கடைகளின் அமைவிடம் முக்கியமான பஜாருக்கு நடுவிலோ அல்லது குடியிருப்பு பகுதியிலோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ இருக்கக்கூடாது.
ஜவுளிக்கடைகள், வெட்டிங் பட்டறை போன்ற எந்த வகையான கடை களின் அருகில் வெடிபொருள்கள் விற்பனை நிலையங்கள் அமைத் திருக்கக் கூடாது. அலங்கார விளக்குகள் கடையின் மேலே அல்லது அதன் கட்டமைப்புகளில் தொங்கவிடுவது என்பது தீ விபத்துகளை ஏற்படுத்த கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்குமான சுவிட்சுகள் நன்கு சுவற்றில் பதியப் பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மட்டும் பலர் கலந்து கொண்டனர்.



