ஈரோடு, ஆக 11 –
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ வழிகாட்டுதலின் பேரில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில்
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி, பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வேதானந்தம், சிவசுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு சாலையை அமைக்க மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணத்தின் போது ஏராளமான மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்றார். இதன் பிறகு அவர் முதல் அமைச்சர் ஆன பிறகும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. இது இந்த ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விளம்பரத்துக்காக இந்த அரசு செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ, வக்கீல் பழனிச்சாமி, முன்னாள் தலைவர் வேதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



