திருவட்டார், ஜூலை 2 –
திருவட்டாறு அருகே பேரை பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (45). இவருக்கு இன்னு திருமணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, அதன் பிறகு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. உடனே உறவினர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றவர்கள் அங்கு குளத்தின் நடுப்பகுதியில் ஒரு சடலம் மிதப்பதை கண்டுள்ளனர். உடனடியாக திருவட்டார் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தவர் காணாமல் போன பொன்ராஜ் என்பது தெரிய வந்தது. போலீசார் உடனடியாக உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ராஜ் குளிக்கும் போது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என விசாரித்து வருகின்றனர்.