நாகர்கோவில், மே 28 –
தினதமிழ் செய்தி எதிரொலியாக குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டு பள்ளிவிளை, சானல்கரை சாலை என்பது கனியாகுளம் ஊராட்சி 7வது வார்டு பகுதியை இணைக்கும் சாலை ஆகும். இந்த சாலையில் நாகர்கோவில் டவுன் ரயில்வே நகர் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை இரண்டு நிர்வாகத்திற்கும் இடைப்பட்ட பகுதி என்பதால் குப்பைகள் வாங்க தூய்மை பணியாளர்கள் வருவதில்லை.
இதனால் கனியாகுளம் ஊராட்சி 7வது வார்டு பகுதி சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு மாத கணக்கில் குப்பைகள் அள்ளாமல் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. குப்பையால் நாய் தொல்லை, கொசு தொல்லை, துர்நாற்றம் போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இது குறித்து தினதமிழில் செய்தி வெளியானது.
செய்தியை அறிந்த நாகர்கோவில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா அப்பகுதி மக்கள் நலன் கருதி இன்று சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். மேயர் வருகையை அறிந்த அப்பகுதி மக்கள் மேயரிடம் தங்கள் பிரச்சனையை எடுத்து கூறினார்கள். சுகாதாரமற்ற நிலையில் இருந்த அந்த பகுதியை பொது மக்கள் நலன் கருதி உடனே தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இது அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்கை பிரச்சனையால் சுகாதாரமற்ற நிலையில் இருந்த அந்த பகுதியை தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மட்டுமின்றி இந்த பகுதியை தூய்மையாக வைக்க கனியாகுளம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தார்.
பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை வீசாமல் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க மேயர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் தூய்மையான மாநகரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



