கருங்கல், செப். 3 –
குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அடுத்தபடியாக உள்ள மிக முக்கியமான மாநில நெடுஞ்சாலையான பரசேரி – திங்கள்நகர் – புதுக்கடை சாலையாகும். இந்த சாலையில் திக்கணங்கோடு பகுதியில் உள்ள பழைய பாலத்தை மாற்றி புதிய அகலமான பாலம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை எந்தவித முறையான அறிவிப்பும் செய்யாமல் திடீரென பழைய பாலம் முழுவதுமாக நேற்று உடைக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் தற்காலிக பாதையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்யாததால் மத்திகோடு, மணலிக்காட்டுவிளை, மாத்திரவிளை, அரித்தினான்விளை, பரப்புவிளை, காட்டுகுளம், மூவர்புரம், அம்பலத்துவிளை, கோத்திரவிளை, குறண்டி, மத்திகோடு பாலம், கருக்குப்பனை, மானான்விளை, புனத்திட்டை, கருமாவிளை, மாங்கோடு, பிச்சன்விளை, வடக்கன்கரை, குடுவன்விளை, குடுக்கச்சிவிளை, ஏழுவிளை போன்ற 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் அடியோடு பாதிக்கப்பட்டனர்.
ஆகவே பொதுமக்கள் கோரிக்கையின் படி திக்கணங்கோடு உடைக்கப்பட்ட பாலம் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மாற்று வழி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அரசு பேருந்துகளை திக்கணங்கோடு, பூக்கடை, மாங்கோடு, மூவர்புரம், மத்திகோடு, கருக்குப்பனை, மானான்விளை, கருமாவிளை வழியாக கருங்கலுக்கு ஒரு வழியாகவும் மற்றும் கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப்பனை, மத்திகோடு, அம்பலத்துவிளை, கோத்திரவிளை, மேற்கு மாத்திரவிளை, மாத்திரவிளை, கோட்டவிளை, திக்கணங்கோடு வழியாக திங்கள்நகர், நாகர்கோவில் இடங்களுக்கு இந்த வழித்தடங்களில் ஒரு வழிப்பாதையாக இயக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய வழியில் பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் உடைக்கப்பட்ட பாலம் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், திக்கணங்கோடு பகுதி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் நாளை 4-09-2025 அன்று காலை 9 மணிக்கு பொதுமக்கள் மற்றும் திக்கணங்கோடு பகுதி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் திக்கணங்கோடு ஜங்ஷனில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



