தஞ்சாவூர், ஜூன் 29 –
த.வெ.க ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கி விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: தமிழக வெற்றி கழக ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலம் அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த அரசின் தவறுகளை சருக்கல்களை இளைஞர்கள் தட்டி கேட்க தொடங்கி விட்டனர். அப்படி தட்டி கேட்கிற இளைஞர்களையும் நம்முடைய கட்சியினரையும் கைது செய்யும் வேலையை சோபா மாடல் அரசு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு நிகழ்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சட்ட ஒழுங்கை ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளி உள்ளனர். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் என்னென்ன கூத்துகள் நடத்தினர் என்பதை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
இது சட்டப்பேரவையா அல்லது திரையரங்கமா அல்லது படப் பிடிப்பு நடைபெறும் இடமா என கேட்கும் அளவிற்கு சட்டப்பேரவையின் தரத்தை த.வெ.க அரசு சிதைத்து வருகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் திமுக தான் காரணம் என ஆயத்தமான ஒரு பதிலை ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர். தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய பேரிடரில் சிக்கி உள்ளது. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி. செழியன், வைத்திலிங்கம், எஸ் ரகுபதி, மெய்யநாதன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், டி கே ஜி நீலமேகம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலர் செல்ல பாண்டியன் உள்பட திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் அம்மன்குடி ராஜேந்திரன் மற்றும் மணமக்களின் குடும்பத்தார் செய்திருந்தனர்.



