சென்னை, செப். 9 –
தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பாக மின்வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்து சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகில் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம், வட்டப் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. சங்கப் பொதுச் செயலாளர் ஸ்ரீராமன் தலைமையில் தலைவர் தமிழரசன், பொருளாளர் பாலாஜி, அமைப்புச் செயலாளர் லிங்கேஸ்வரன், கெளரவத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 5 ஆண்டுகால அனுபவத்தையும், கல்வித்தகுதியையும் பெற்ற கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக அறிவிக்க வேண்டும். எந்த வரன்முறையும் இன்றி கேங்மேன் பணியாளார்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தும் வாரியம் மற்றும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிப்பதும் மட்டுமின்றி ஐந்தாண்டு காலம் வாரியத்திற்காக உழைத்த கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்றும் வரை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் கள உதவியாளர் நேரடி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்னிறுத்தி ஆர்பாட்டம் நடைபெறுகிறது. தற்போது எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.



