விழுப்புரம், ஆகஸ்ட் 06 –
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாபெரும் தமிழ்க்கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித்துறையுடன் இணைந்து “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
முதலாவதாக, தமிழ்ப் பெருமிதம் குறித்த சொற்பொழிவினை சிறப்பாக ஆற்றிய 10 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் சிறப்பான பேச்சாற்றலுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி மட்டுமல்ல, தங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கக்கூடிய நிகழ்ச்சியாகும். தமிழ்மொழி, தமிழ் மரபு, தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் தொன்மையானதாகும். வேகமாக சென்றிருக்கூடிய நவீன உலகில் தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழர்களின் மரபை தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடத்திட நமது மாநிலத்தில் 200 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான், விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய தினம், அரசு சட்டக்கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியின் மூலம், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மரபு உள்ளிட்டவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்து கொள்வதுமட்டுமல்லாமல், உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி மற்றும் மாணவர்களாகிய வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மாபெரும் தமிழ்க்கனவின் மூலம், பழமை பற்றி பேசுவோம், நிகழ்காலத்தை பற்றியும் பேசுவோம், எதிர்காலம் குறித்தும் பேசுவோம். அந்த வகையில் தான் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வோடு, சுயதொழில் புரிவதற்காக வழங்கப்படக்கூடிய வங்கிக் கடனுதவிகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சியில் தாங்கள் பெற்ற நற்கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
எனவே, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழ் பண்பாட்டிற்காக கூடுதலாக பெருமை சேர்க்கப்போகிறோம் என்ற உணர்வோடு தங்களுடைய பங்களிப்பினை வழங்கிடுவதோடு மட்டுமல்லாமல் மாபெரும் தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வில், வரலாற்று நாயகர்களாய் வாழ்ந்த மாபெரும் தலைவர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமிகு ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து, மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் கலந்துகொண்டு தமிழ்ப்பெருமிதம் குறித்து பேசிய 10 மாணவ, மாணவியர்களுக்கும், கேள்வி – பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா. வெங்கடேஷ்வரன், இ.ஆ.ப., திண்டிவனம், ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் து. தங்கராஜன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் சீ. கிருஷ்ண லீலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



