தஞ்சாவூர், ஜூன் 9 –
தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூய்மை பணி நடைபெற்றது. திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு நகராட்சி நிர்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு திருத்தொண்டர் அறக்கட்டளை, காந்தி பாரதி இளைஞர் மன்றம், கண்டியூர் பயோ கேர் கல்லூரி ஆகியவை சார்பில் நடைபெற்ற இப்பணியை திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவர் குணசுந்தரம் முன்னிலையில் திருவையாறு நகர் மன்ற துணைத் தலைவர் நாகராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காவிரி ஆற்று மணலில் இருந்த சுமார் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஏராளமாக இருந்தன. இப்பணியில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவையாறு நகராட்சி ஆணையர் மதன்ராஜ் பாரதி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் பிரேமசாயி, செயலர் சீனிவாசன் அறங்காவலர் சந்திரசேகர், பாரதி இயக்கம், ரோட்டரி சமுதாயக் குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.