தஞ்சாவூர், ஜூன் 19 –
தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 கி.மீ. தொலைவிற்கு சாலையில் நடந்து சென்று திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் கார் மூலம் தஞ்சாவூருக்கு வந்தார். இதனிடையே திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி, மேலவஸ்தா சாவடி உள்ளிட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் தஞ்சாவூர் மணி மண்டபம் பகுதிக்கு வந்தவர் சாலையில் நடந்து செல்லத் தொடங்கினார். திருச்சி சாலை, மேரிஸ் கார்னர், ரயிலடி, காந்திஜி சாலை, இரட்டை மஸ்தான் தர்கா, ராஜப்பா பூங்கா வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வரவேற்று கை குலுக்கினர். மேலும் முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருக்கு திமுகவினர் வெள்ளி வாளும் புத்தகமும் நினைவு பரிசாக வழங்கினர். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கோவி. செழியன் மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ச.முரசொலி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி நிலமேகம், என்.அசோக் குமார், கா.அண்ணாதுரை, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லணையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென தஞ்சாவூர் மருத்துவமனைக்குள் சென்றார். அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்ற தமிழக முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவக் கல்லூரி சாலை, பாலாஜி நகரில் வசிக்கும் திமுக மூத்த நிர்வாகியும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினருமான எல்.கணேசன் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.