தக்கலை, செப். 19 –
தக்கலை அருகே உள்ள கோழிப்போர் விளையை சேர்ந்தவர் கிங்சிலி மனைவி ஷாஜிலா (40). பாலிடெக்னிக் முடித்துள்ளார். இவர் அரசு வேலைக்காக மாவட்ட வேலை அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தார். உறவினர் ஒருவர் மூலம் புதுக்கடை அடுத்த உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருடன் கிங்ஸ்லிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்டீபன் மனைவி சாந்திக்கும் ஷாஜிலாவுக்கும் நட்பு ஏற்பட்டது.
அப்போது சாந்தி தனது கணவர் ஸ்டீபனுக்கு தெரிந்த நபர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க் வேலை தருவதாகவும் அதற்கு ரூ. 20 லட்சம் வரை ஆகும் என கூறியுள்ளார். இவரை நம்பி ஷாஜிலா ரூ.14 லட்சத்து 48 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய பின் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் அளித்தார். தக்கலை போலீசார் விசாரித்து ஸ்டீபன் (38), அவரது மனைவி சாந்தி (33) மற்றும் முருகன் (35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.


