சேலம், ஜூலை 11 –
சேலம் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொது மக்களின் நலன் கருதியும், நோயாளிகளின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை குறைத்து சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 12.7.2026 முதல் சோதனை அடிப்படையில் சேலம் மாநகரில் புதிய போக்குவரத்து வழித்தட மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக ப்ரீத்தம், பிரணவ் மற்றும் எஸ்.கே. எஸ் ஆகிய மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைக்காக வருகை தரும் பொது மக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாத வகையில் பொது மக்களின் உயிரை காக்கும் பொருட்டு சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பை ஒழுங்கு படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல் துறையினருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சோதனை அடிப்படையில் இன்று 12.07.2026 முதல் பிருந்தாவன் சாலை மற்றும் அதனை ஒட்டி உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் ஊர்திகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஓமலூர் பிரதான சாலையிலிருந்து வழக்கம் போல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. எனினும் வெளியே வரும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை பகுதிக்கு சென்ற வாகனங்கள் எஸ். கே.எஸ் மருத்துவமனை சாலை- செவன்த் கிராஸ் சாலை- எல்ஐசி காலனி சாலை வழியாக வெளியே வந்து ஓமலூர் பிரதான சாலையை அடைய வேண்டும். எல்.ஐ.சி காலனி ஏழாவது கிராஸ் சாலை மற்றும் வசந்தம் ஹோட்டல் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் எஸ்.கே.எஸ் மருத்துவமனை சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதற்காக எல்ஐசி காலனி சாலை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிருந்தாவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி ஏழாவது கிராஸ் சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் நேரடியாக ஓமலூர் பிரதான சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் செயல் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட போக்கு வரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்துக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


