பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு பெட்டகம் அமைப்பு
சுசீந்திரம், செப். 1:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் சிலர் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதுடன், அவற்றை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டு வந்ததால், பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கோவில் நிர்வாகம் செல்போனுக்கு தடை விதிக்கும் முடிவை நடைமுறைப்படுத்தியுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் நுழைவு வாயில் அருகே 60 அறைகள் கொண்ட இரும்பு பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 8 முதல் 10 செல்போன்கள் வரை வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் செல்போன்கள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவிலுக்குள் அமைதியான முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கன்னியாகுமரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலிலும் நேற்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



