சிவகங்கை, அக். 09 –
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் பெரும்பாலும் டூட்டி டாக்டர்களின் பங்கெடுப்பு என்பது குறைந்துவிட்டது எனவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களே பெரும்பாலும் சிகிச்சை அளிக்கின்றனர் என்றும் அங்கு வரும் நோயாளிகள் புலம்புகின்றனர். நிரந்தரப் பணியில் இருக்கும் டாக்டர்கள் பயிற்சி டாக்டர்களை அழைத்து நோயாளிகளை கவனிக்கச் செய்துவிட்டு அடிக்கடி வெளியே சென்று விடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
அவசரச் சிகிச்சைப் பிரிவில் பயிற்சி டாக்டர்கள் இருக்கும் போது காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் நோயாளி உள்ளே வரும்போது சிகிச்சையை மெதுவாகவும், பணியில் மெத்தனம் காட்டுவதாகவும் நோயாளிகள் குறை கூறுகின்றனர். இதுபோன்ற நிலை காணப்படும் போது நோயாளியுடன் துணைக்கு வருபவர்கள் பயிற்சி மருத்துவர்களை சில நேரங்களில் விதிகளுக்கு முரணாக கையால் தாக்கியும் விடுவதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற நிலைபாடுகள் வராமல் இருக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் இது போன்ற விஷயங்களில் தனிக் கவனம் செலுத்தி நிரந்தர மருத்துவர்கள் உரிய நேரங்களில் பணியில் இருக்கிறார்களா? சரியாக பணி புரிகின்றனரா என்பதையும் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .



