சிவகங்கை, அக். 10 –
சிவகங்கை மாவட்டத் தலைநகராக இருக்கும் சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு போதிய அளவில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென சிவகங்கையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தையும், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தையும் காரைக்குடிக்கு மாற்ற முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாகவே நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தின் போது வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சித்திரைச்சாமி பேசும்போது: மாவட்டத் தலைநகராக இருக்கும் சிவகங்கையின் தனித்துவம் ஒவ்வொன்றாய் பறிபோய் வருகிறது. ஏற்கனவே சிவகங்கைக்கு வந்த சட்டக்கல்லூரி, விவசாய கல்லூரி பறிபோனது. இவை அனைத்தும் காரைக்குடியிலேயே இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இப்போது சிவகங்கையில் செயல்பட்டு வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ஊழல் தடுப்பு நீதிமன்றமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி சிவகங்கையில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்களை சிவகங்கையிலேயே செயல்பட உத்தரவிட வேண்டும். இல்லையெனில் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



