சிவகங்கை | செப்.17:
சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாய் பகுதியில் கடந்த செப்.16-ம் தேதி 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காளையார்கோவில் அருகே குருந்தனிவாரியேந்தலைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27), சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி (25) ஆகியோர் பழமலைநகர் – கொடிக்காடு கண்மாய் பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்களின் புதிய காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் லைலா மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில், பாலமுருகன் (24), தனராஜ் (19), சந்தோஷ் (19), சதீஷ்குமார் (25), காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



