நாகர்கோவில், மார்ச் 26 –
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நேற்று நாகர்கோவிலில்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆசி பெற்று 2011 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு 2011 – 2016 வரை நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தேன். கட்சிக்காக கடுமையாக உழைத்தேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் என் மீது பொய் வழக்கு போட வைத்து என்னை அழிக்க நினைத்தார். அந்த வழக்கை சட்டப்படி சந்தித்து வெற்றி பெற்றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்னை அழைத்து பேசாதது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
நாகர்கோவில் மாநகராட்சியில் ஆறு மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பல நலத்திட்டங்களை வழங்கி அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் யார் நின்றாலும் வெற்றி பெறும் அளவிற்கு தொகுதியில் களப்பணிகள் செய்து உள்ளேன்.
தளவாய் சுந்தரம் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், துரோகம் செய்து வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு தொகுதி மட்டும் அதிமுகவிற்கு ஒதுக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் வெற்றி தொகுதியாகும். இந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்து விட்டு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தளவாய்சுந்தரம் போட்டியிடுவது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி 72% சதவீதம் நாடார் சமுதாய மக்களைக் கொண்ட தொகுதியாகும். எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் எப்படி தளவாய்சுந்தரம் வெற்றி பெற முடியும்? அவர் வேண்டுமென்றே எங்களை ஓரங்கட்டி வருகிறார். எங்கள் வாக்குகள் மட்டும் பெற்றுக் கொண்டு எங்கள் சமுதாயத்திற்கு துரோகம் செய்து வருகிறார். நான் பல கோடிகள் செலவு செய்து உள்ளேன். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி எங்களுக்கு தராதது மிகுந்த வேதனையளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் தளவாய் சுந்தரம் தான். அவர் ஒரு துரோகி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்காக மட்டுமே நாங்கள் அதிமுகவில் இருக்கிறோம். அவர் எங்களை நல்ல முறையில் நடத்துகிறார். நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் நன்றாக பேசினார். அது போதும், நான் வேறு கட்சிக்கு செல்ல விருப்பம் இல்லை. உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காக கடுமையாக உழைத்து உள்ளேன்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தளவாய் சுந்தரத்தை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். தளவாய் சுந்தரத்தை காட்டிலும் அதிக வாக்குகள் பெறுவேன். அதிகமாக வாக்குகள் வாங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன். நாகர்கோவில் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிடுவேன்.
நாடார் சமுதாய மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் ஆதரிக்கும் நபர் தான் வெற்றி பெற முடியும். இது தளவாய் சுந்தரத்தால் முடியாது. ஆறு தொகுதியிலும் நாடார் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.



