சென்னை, ஆகஸ்ட் 15 –
சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவை தலைமையிடமாக கொண்ட பிரஜாஹிதா அறக்கட்டளையுடன் இணைந்து சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் யூபிஎஸ்சி பயிற்சியான சேது (எஸ்.இ.டி.யூ) திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் நாட்டின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் இடங்களில் பிரதிநிதித்துவத்தை பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் எஸ்.இ.டி.யூ திட்டம் இந்தியா முழுவதிலும் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 30 முழு நிதியுதவி உதவித்தொகைகளுடன் தொடங்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் 400 உதவித்தொகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு விரிவுபடுத்தப்படும்.
எஸ்.இ.டி.யூ திட்டம் குறித்து பிரஜாஹிதா அறக்கட்டளையின் இயக்குநர் சூரஜ் சந்தோஷ் குமார் தெரிவித்ததாவது: முதல் தொகுதிக்கான தேர்வு செயல் முறையின் ஒரு பகுதியாக நாடு தழுவிய உதவித்தொகை நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2025 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி மையங்களிலும் நடத்தப்படும். இது பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க சம வாய்ப்பை உறுதி செய்யும்.
நீண்ட காலமாக, மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக அவர்களின் திறமைகள் மதிப்பற்றதாக உள்ளது. அந்த குறையை போக்கவே எஸ்.இ.டி.யூ திட்டத்தை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மூலமாக பயிற்சி அளித்து தேர்வுகளில் வெற்றிப் பெறச் செய்யும் யுக்தியை பயன்படுத்துகிறோம் என்றார்.
இந்த முயற்சி குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் வைஷ்ணவி கூறியதாவது: இந்த திட்டம் முதல் ஆண்டில் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் கவனம் செலுத்தி நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு எளிதில் அணுக கூடிய அளவிற்கு பயன்பெற உறுதி செய்யும். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிரூபிக்கப்பட்ட யூபிஎஸ்சி கட்டமைப்பிலிருந்து பிரெய்லி, பெரிய அச்சு, ஆடியோ மற்றும் திரை வாசகம் (டெலி பிராம்ட்) இணக்கமான மின்-கற்றல் தொகுதிகள் போன்ற பாடத் திட்டங்கள் எளிய வடிவங்களில் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. மாநாடு வரையறுக்கபட்ட பாடதிட்டங்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வெற்றிகரமான அரசு ஊழியர்களைக் கொண்ட வழிகாட்டுதல் வலையமைப்பு உதவியுடன் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.



