கோவை, ஆக. 27:
கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம், கோகுலம் பார்க் ஹோட்டல் எதிரே “கோவை அக்வா பார்க்” என்ற பெயரில் தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட கடல் மற்றும் அணை மீன் வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிராம் எடையுள்ள சிறிய மீன்கள் முதல் 40 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் வரை பல்வேறு வகைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கைகளில் அமரும் பறவைகள், நெருப்புக்கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் அரங்கம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, முழுவதும் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி வளாகத்தில் உணவுக் கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். குழந்தைகளுக்கு ரூ.200, பெரியவர்களுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி அரங்கை கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தொடங்கி வைத்தார். கோவை மக்களின் விடுமுறை தினங்களை இனிமையாக்கும் வகையில் இந்த அக்வா பார்க் அமையும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



