இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டல இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வகிக்க கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்தில் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களும் இராமநாதபுரத்தில் துணைப்பதிவாளர் பொது விநியோகத் திட்ட அலுவலகமும் இராம்கோ பண்டக சாலையில் மேலாண்மை இயக்குநராக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இப்ணியாளர்களுக்கு பிரதி வருடம் மே மாத இறுதியில் அரசாணை எண் 10 நாள் 07.01.1994ன்படி மூன்றாண்டு முடித்தவர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் பணி மாறுதல் ஆணை வழங்குவார். இவ்வாண்டு தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தமையால் ஜுன் மாத இறுதியில் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற பணிமாறுதலில் புரோக்கர்களின் தலையீடு மற்றும் செல்வாக்கால் புரோக்கர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மற்ற பணியாளர்கள் ஏமாற்றத்தில் புலம்புகின்றனர். புரோக்கர்களின் தலையீடு அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை. பொதுவாக இப அலுவலக துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர்தான் காலியாக உள்ள துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) பணியிடத்தில் கூடுதல் பொறுப்பாக பணி நியமனம் செய்யவேண்டும் .
இது நிலையான உத்தரவு. இதுதான் தமிழகம் முழுவதும் நடைமுறை. ஏனெனில் இவ்விருவரின் அலுவலகமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.ஆனால் தற்போது இராமநாதபுரம் மண்டலத்தில் துணைப்பதிவாளர் பணியாளர் அலுவலரிடமிருந்த பொது விநியோகத் திட்ட பொறுப்பை வலுக்கட்டாயமாக பிடுங்கி புரோக்கர்கள் பரிந்துரையின் பேரில் ராம்கோ மேலாண்மை இயக்குநரை துணைப்பதிவாளர் பொது விநியோகத் திட்டமாக நியமித்துள்ளார்கள். இவரது இராம்கோ பண்டகசாலை அலுவலகம் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் நிர்வாகச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு இடத்திலும் அதிகாரி ஒரு இடத்திலும் எல்லாம் காந்தி தாத்தா சிரிப்பால்தான் இம்மாற்றம் என பணியாளர்கள் புலம்புகின்றனர். மேலும் அரசாணைக்குப் புறம்பாக பலிவாங்கும் நோக்குடன் மூன்றாண்டு நிறைவுபெறாமலேயே சில பணியாளர்களை இணைப்பதிவாளர் பணிமாறுதல் செய்துள்ளார் எனவும் பணி மாறுதலில் பணியாளர்கள் அளித்த கோரிக்கைகளையும் முற்றிலும் செவிமடுக்காமல் புரோக்கர்களின் பேச்சை மட்டுமே கேட்டு செயல்பட்டுள்ளார்மேலும் கூட்டுறவு சார்பதிவாளர் பொது விநியோகத் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து பணியமர்த்தக்கூடாது. பொது விநியோகத்திட்ட கூட்டுறவு சார்பதிவாளர்களை மீண்டும் பொதுவிநியோகத்திட்டத்ல் பணியமர்த்தக் கூடாது. ஏற்கனவே இதில் பணியாற்றாத கூட்டுறவு சார்பதிவாளர்களைத்தான் பணியமர்த்த வேண்டும் என்று உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ந.க.69342/2006/பதொ-2 நாள் 12.01.2007ஐ காற்றில் பறக்கவிட்டுவிட்டு உதாசீனம் செய்து சுயலாபம் கருதி புரோக்கர்களுடன் கைகோர்த்துக் கொண்டு முறையற்ற வகையில் ஏற்கனவே பொது விநியோகத் திட்டத்தில் பணியாற்றிய கூட்டுறவு சார்பதிவாளர்களையே மீண்டும் பணியமர்த்தியும் மற்றும் பதிவாளர் சுற்றறிக்கைக்கு முரணாக இரண்டு ஆண்டுகள் முடிந்தபின்னரும் மாற்றாமல் அப்பணியிடத்திலேயே சிலரை பொது விநியோகத்திட்டப் பணியில் தொடரச்செய்துள்ளார் இணைப்பதிவாளர். இவ்வாறு முறையற்ற வகையில் பணிநியமனம் செய்த இணைப்பதிவாளர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முறையற்ற பணிமாற்றத்தை ரத்து செய்வதுடன் அரசாணை மற்றும் பதிவாளர் சுற்றறிக்கைக்கு உட்பட்டு பணி நியமனம் செய்யுமாறும் பணி மாறுதலில் பிறதுறைகளில் உள்ளவாறு கவுன்சிலிங்க் முறையை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.