மார்த்தாண்டம், ஜூலை 12 –
குழித்துறை நகராட்சியால் ஆண்டு தோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த வருடம் நூறாவது ஆண்டு பொருட்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் ஏராளமான பக்க காட்சிகள் அமைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேமானூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) என்ற வாலிபர் இரவில் விழாவில் பிளக்ஸ் போர்டு கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 15 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக விக்னேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.