நாகர்கோவில், பிப். 18 –
நாகர்கோவில் கட்டையன்விளை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக ஜீவா என்ற வாலிபர் பணியாற்றி வந்தார். அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கட்டையன் விளையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றினேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் நிறைய பேருக்கு மின்வாரியம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் எனவும், இப்போது மின்வாரியத்தில் நிரந்த டிரைவர் பணியிடம் நிரப்ப உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் உனக்கு அந்த வேலை நிரந்தரமாக வாங்கி தருவேன் என்று கூறினார். மேலும் உனக்கு தெரிந்த நபர்களும் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறினார்.
அரசு வேலை என்பதால் நான் ரூ. 5 லட்சம் கொடுத்ததுடன், எனது நண்பர்கள் உறவினர்கள் என்று மொத்தம் ரூ.20 லட்சம் கொடுத்தோம். மேலும் எனது வங்கி கணக்கில் இருந்து அவருக்கு ஷோபா, செல்போன் வாங்க லோன் எடுத்துக் கொடுத்தேன். ஆனால் திடீர்னு அந்த பெண் அதிகாரி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. எங்களிடம் வாங்கிய பணத்தையும் தரவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவு பெற்று வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண் அதிகாரி மீது கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 4 முறை நீதிமன்றத்தின் முன் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காவல்துறை அந்தப் பெண் அதிகாரி கைது செய்யவில்லை. எனக்கு தெரிந்து 20க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். ஐஜி, எஸ்பியிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு மிரட்டல் வருகிறது. உயிருக்கு பயமாக உள்ளது. வேலை இல்லாமல் நான் தற்கொலை செய்யும் முடிவில் உள்ளேன். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


