தஞ்சாவூர், ஜூலை 30 –
காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடி எட்டி உள்ள நிலையில் உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது.
ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் யாரும் நீர் நிலைப்பகுதியில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். அபாயகரமான இடங்களில் செல்பி எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆற்றில் அதிக நீர் வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்க செல்லக் கூடாது. வெளியூரில் இருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம். குளிக்க செல்லும் போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் அந்தப் பகுதிக்கு தங்களது குழந்தைகளை விளையாட செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.