நாகர்கோவில், ஜூலை 18 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று காலை கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். குறிப்பாக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பொதுக்கழிப்பிடம், சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிதியில் கைப்பிடி அமைக்கப்பட்டுவரும் பணிகள், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள், கடற்கரை அழகுப்படுத்தும் பணிகள் குறித்து திடீர் என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவினை மேம்படுத்துவது குறித்தும், கழிப்பறை, குடிநீர் வசதி, குழியலறை உள்ளிட்டவை சுத்தமாகவும், சுகாதாரத்துடன் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து முடித்திட பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அய்யன் திருவள்ளுவர் அவர்களை சுற்றுலா பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுவினையும் அவ்வழியாக படகு சவாரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி செல்வதற்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்தும், பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து அஞ்சுகிராமம் மற்றும் கோவளம் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற ஆய்வுகளில் நகராட்சி மண்டல இயக்குநர் நகைந்திரன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் பட்டுசாமி, பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



