தேனி, செப். 13 –
ஆந்திரா மற்றும் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஒரிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தேனி மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேனி மதுவிலக்கு காவல் துறையினர் தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பெண் உட்பட மூன்று பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோவு முத்தையா (55) மற்றும் கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பதும், அவர்களுடன் இருந்த பெண் ஆந்திர மாநிலம் அனங்கபள்ளி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமியம்மா என்பதும் தெரிய வந்தது.
மேலும் மூன்று பேரும் விற்பனைக்காக ஒரிசாவிற்கு சென்று ஆந்திரா வழியாக கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அவர்களில் சோவுமுத்தையாவிடமிருந்து 16.470 கிலோ, கார்த்திக்கிடமிருந்து 8.250 கிலோ, மகாலட்சுமியம்மாவிடமிருந்து 4.100 கிலோ என மொத்தம் 28.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்று பேர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்த தேனி மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது குற்றவாளியான சோவு முத்தையா மீது இதற்கு முன் ஏழு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


