மார்த்தாண்டம், ஜனவரி 31 –
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிள்ளியூர் மற்றும் தக்கலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் கிள்ளியூர், பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.27.45 இலட்சம் மதிப்பில் 950 மீட்டர் நீளத்தில் பூட்டேற்றி சால்வேசன் ஆர்மி முதல் கோட்டவிளை வரை சாலை மேம்பாடு பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தக்கலை, ஆத்திவிளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.17 கோடி மதிப்பில் 3.51 கி.மீ நீளத்தில் ஆலங்கோடு முதல் வட்டம் ஆழ்வார்கோவில் தார்தளம் அமைக்கும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



